அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Monday, February 24, 2014

15வது மாநிலப் பொதுக்குழு தீர்மானங்கள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 15வது மாநிலப் பொதுக்குழு ஈரோட்டில் உள்ள பிளாட்டினம் மஹாலில் 23.02.14 ஞாயிற்றுக்கிழமை அன்று கூடியது. இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி அறிவிப்புத் தீர்மானங்கள் :

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் நீண்ட காலமாக முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. மத்தியில் 10 சதவீதமும், மாநிலத்தில் 7 சதவீதமும் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளித்தால்தான் முஸ்லிம்கள் போதுமான பிரதிநிதித்துவம் பெற முடியும் என்பதைக் கவனத்தில் கொண்டு ஜனவரி 28அன்று சென்னை, திருச்சி, நெல்லை, கோவை ஆகிய நான்கு நகரங்களில் மாபெரும் சிறைநிரப்பும் போராட்டத்திற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை உரிய முறையில் மக்கள் உள்ளங்களில் பதியச் செய்து லட்சக்கணக்கான மக்களைத் திரளச் செய்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு தனது நன்றியை இப்பொதுக்குழு உரித்தாக்குகின்றது.


சமுதாயத்தின் நன்மைக்காக மட்டுமே இப்போராட்டம் நடத்தப்படுகின்றது என்று உளப்பூர்வமாக உணர்ந்து போராட்டத்தில் பங்கேற்ற தாய்மார்கள், பெரியோர்கள், இளைஞர்கள் மற்றும் பலவீனர்கள் அனைவருக்கும், இப்போராட்டம் வெற்றிகரமாக அமைய தன்னலம் பாராமல் உழைத்த தொண்டர்களுக்கும் பொருளுதவி செய்த நல் உள்ளங்களுக்கும், பள்ளிவாசல்களில் இப்போராட்டம் குறித்து அறிவிப்புச் செய்த ஜமாஅத்தார்களுக்கும், தவ்ஹீத் ஜமாஅத் மீது நம்பிக்கை வைத்து கலந்து கொண்ட மாற்றுக் கருத்துடையவர்களுக்கும் இப்பொதுக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

அயல் நாடுகளில் பணிபுரிந்தாலும் தங்களது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போராட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமூட்டிய நல்லுள்ளங்களுக்கும் இப்பொதுக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இப்போராட்டத்திற்கு தேவையற்ற முட்டுக்கட்டைகளைப் போடாமல் இந்திய அரசியல் சாசனம் வழங்கிய கருத்துரிமையை மதித்து சிறப்பான முறையில் ஒத்துழைப்பும், பாதுகாப்பும் அளித்த தமிழக அரசுக்கும், தமிழகக் காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் இப்பொதுக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
போராட்டத்திற்கு முன்னரும், போராட்டம் நடந்த நாளிலும், போராட்டத்திற்குப் பின்னரும் இச்செய்தியைத் தக்க முறையில் மக்கள் மத்தியில் கொண்டு சென்ற அனைத்து ஊடகங்களுக்கும், குறிப்பாக இப்போராட்டத்தை நேரடியாக ஒளிபரப்புச் செய்த ஊடகங்களுக்கும் இப்பொதுக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
தவ்ஹீத் ஜமாஅத் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப நடந்து கொள்ளவும், அந்த நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயலாற்றுவது என்று இப்பொதுக்குழு உறுதி பூணுகிறது.

இடஒதுக்கீடு

தனி இடஒதுக்கீடு கோரிக்கை ஒரு தனி இயக்கத்தின் கோரிக்கை மட்டுமல்ல; ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கை என்பதை ஜனவரி 28 போராட்டம் மத்திய மாநில ஆட்சியாளர்களுக்கு தெள்ளத்தெளிவாக அறிவித்துவிட்டது. முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதியை லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று திரண்டு வலியுறுத்தியதை மதித்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தித்தர வேண்டும் என்று தமிழக முதல்வரை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.
முஸ்லிம்கள் இடஒடுக்கீட்டை அதிமுக அரசு உயர்த்தித்தந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிப்பதுடன் அதன் வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடுபடுவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

கடந்த இரண்டு தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்த காங்கிரஸ் தொடர்ந்து முஸ்லிம்களை ஏமாற்றியதையும், சென்னை தீவுத்திடலில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்ட பேரணியிலும், மாநாட்டிலும் இது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றிய பின்பும், இந்தத் தீர்மான விபரங்களை பிரதமரிடமும், சோனியா காந்தி அவர்களிடமும் நேரிலேயே தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமை நிர்வாகிகள் விளக்கம் கூறி வலியுறுத்திய பின்பும், முஸ்லிம்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

பொய்யான மோடி அலை

மோடிதான் அடுத்த பிரதமர் என்று ஊதிப் பெரிதாக்கி, போலி கருத்துக்கணிப்பு நடத்தி கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் நாணயமற்ற ஊடகங்களை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஊழலின் இலக்கணமாக திகழும் எடியூரப்பாவை அருகில் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிப்பதாக கூறும் மோடி, ரிலையன்ஸ் விஷயமாக கெஜ்ரிவால் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனம் காக்கும் மோடி, ஊழலை ஒருக்காலும் ஒழிக்கமாட்டார் என்று நாட்டு மக்களை இப்பொதுக்குழு எச்சரிக்கின்றது.

இளம் பெண் ஒருவருக்காக தனது மாநிலத்திலும், அண்டை மாநிலங்களிலும் அதிகார துஷ்பிரயோகம் செய்தும், அப்பெண் யாருடன் பழகுகின்றாள் என்பதை அறிவதற்காக அரசுப் பணியாளர்களையும் உயர் அதிகாரிகளையும் பயன்படுத்தியுள்ளதையும், தன் மனம் கவர்ந்த பெண்ணுக்காக ஒட்டுமொத்த காவல்துறையையே கேவலமாக பயன்படுத்திய நரேந்திர மோடியால் ஒருக்காலும் நல்லாட்சி தரமுடியாது என்று நாட்டுமக்களுக்கு இப்பொதுக்குழு எச்சரிக்கின்றது.

மோடி தனது மாநிலத்தைக் கடந்து அண்டை மாநிலங்களிலும் மனம் கவர்ந்த பெண்ணை உளவு பார்த்த தேசத்துரோகச் செயலை அம்பலப்படுத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கத் துணிவில்லாத மத்திய அரசின் கையாலாகத் தனத்தை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

முஸ்லிம்கள் என்ற காரணத்துக்காக பல்லாயிரம் முஸ்லிம்களைக் கொன்று குவித்தும், சொத்துக்களைச் சூறையாடியும், பள்ளிவாசல்களை இடித்தும் பாலியல் பாலியல் கொடுமைகள் செய்தும் வெறியாட்டம் போட்டவர் மோடி என்பதை நடுநிலையான இந்துக்கள் மறந்து விடக் கூடாது எனவும், பயங்கரவாதிகளைத் தப்புவிக்க தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க மறுத்தும், இடிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களைக் கூட கட்டித்தர முடியாது என்று பகிரங்கமாக அறிவித்த மதவெறி பிடித்த, சிறுபான்மை மக்களை கருவறுப்பதை ஒரே கொள்கையாக கொண்ட நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டில் சட்டம் ஒழுங்கும் மத நல்லிணக்கமும் நாசமாகிவிடும். உலக அரங்கில் நாட்டின் நற்பெயர் கெட்டுவிடும் என இந்நாட்டு மக்களை இப்பொதுக்குழு எச்சரிக்கின்றது.

மோடி முஸ்லிம்களைக் கொன்று குவித்து கருவறுத்தவர் என்று சொல்லி முஸ்லிம்களை ஏமாற்றி நடித்து வந்த நயவஞ்சகர் வைகோவின் கட்சியில் எந்த முஸ்லிமும் உறுப்பினராகவோ, பொறுப்பாளர்களாகவோ இருக்கக்கூடாது என்று முஸ்லிம் சமுதாயத்தை உரிமையுடன் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து முஸ்லிம்களின் நண்பனாக வேடம் போடும் கட்சிகளையும் இவ்வாறே புறக்கணிக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு :

கடந்த 2011ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஜாதி வாரியாகவும், மத வாரியாகவும் நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி அதை மத்திய அரசு வெளியிடாமல் உள்ளது. பல்வேறு சமுதாயங்களுக்குரிய இடஒதுக்கீடு உரிய அளவில் கிடைத்திட இக்கணக்கெடுப்பை வெளியிடுவது அவசியம் என்பதால் மத்திய அரசு தாமதமின்றி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வெளியிட வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கின்றது.

ஓரினச்சேர்க்கைக்கு கண்டனம் :

ஆணும் பெண்ணும் திருமணத்தின் மூலம் இணைந்து வாழ்வதுதான் இயற்கையானதும், மனித குலத்தின் அழிவைத் தடுக்கக்கூடியதுமாகும். ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு மாறானது. சந்ததி பெருக்கமின்றி மனித குலத்தை அழித்து விடக்கூடியது. நமது நாட்டின் பண்பாட்டிற்கு எதிரானது. இது நமது நாட்டின் சட்டப்படியும் குற்றச்செயலாகும் என்று இப்பொதுக்குழு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துகின்றது.

இதை ஆதரிக்கும் கழிசடைகளுக்கு எதிராக களமிறங்குமாறும், இந்தக் கேடுகெட்ட செயலுக்கு ஆதரவு தெரிவிக்கும் மத்திய அரசிற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்யுமாறும் இப்பொதுக்குழு நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்கின்றது.

முஸ்லிம் தனியார் சட்டம்:

இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டங்களும், ஒரே மாதிரியான கிரிமினல் சட்டங்களும் உள்ளன. ஆயினும் திருமணம் போன்ற மிக சில விஷயங்களில் ஒவ்வொரு மதத்தினரும் அவர்களின் மத நம்பிக்கையின்படி நடக்க அனுமதியுள்ளது. இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு பெண் உடல் ரீதியாக பருவ வயதை அடைந்துவிட்டால் அவள் திருமணம் செய்யும் தகுதியை அடைந்து விடுகின்றாள். இது முஸ்லிம் தனியார் சட்டப்படி முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையாகும். பெண்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை அமைவது சிரமமாக உள்ள நிலையில் 17வயது மகளுக்கு துணைகிடைக்கும் போது தந்தை மணம் முடிக்க விரும்பினால் அதற்கு இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. இப்படி செய்ய முஸ்லிம் தனியார் சட்டப்படி முஸ்லிம்களுக்கு உரிமையுண்டு. ஆனாலும் 18வயதிற்கு முன் திருமணம் செய்யக்கூடாது என்ற காரணத்தைக்காட்டி இதைத் தடுக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

18வயதில் மட்டுமின்றி அதற்குக் குறைவான வயதிலும் எத்தனையோ பெண்கள் காதலனுடன் ஓடிப்போகின்றார்கள் என்பதைப் பார்க்கின்றோம். 18வயதிற்கு முன்பே திருமணத்திற்கு பெண்கள் தயாராகி விடுகின்றார்கள். ஆசைப்படுகிறார்கள்; திருமணம் தாமதமானால் ஓடிப்போவதற்கும் தயாராக உள்ளார்கள் என்ற நடைமுறை உண்மைக்கு ஏற்ப முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது. எனவே அனைத்து சமுதாயப் பெண்களுக்கும் திருமண வயதைக் குறைப்பதுதான் அறிவுப்பூர்வமானதும் நடைமுறைக்கு ஏற்றதுமாகும் என்று மத்திய மாநில அரசுகளை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

திருமணங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் வரவேற்கத்தக்கது என்றாலும் நடைமுறையில் பல சிக்கல்கள் கொண்டதாக இச்சட்டம் அமைந்துள்ளது. மணப்பெண்ணின் வயதை நிரூபிக்க பள்ளிச்சான்றிதழ் கேட்கப்படுகின்றது. படிக்காத முஸ்லிம் பெண்கள் அதிகமாக உள்ள முஸ்லிம் சமுதாயத்தில் பள்ளிச்சான்றிதழை அனைவரும் காட்ட முடியாததால் பல திருமணங்கள் அரசால் பதிவு செய்யப்படாமல் உள்ளன. முஸ்லிம் சமுதாயம் முழுமையாக கல்வி அறிவு பெறும் வரை திருமணத்தை நடத்தி வைக்கும் ஜமாஅத்தார்களின் பதிவேட்டில் உள்ள வயது மற்றும் விபரங்களையே சான்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

குண்டு வெடிப்பு வழக்கில் சரணடைந்து கைது செய்யப்பட்ட சுவாமி அசிமானந்தா ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் உத்தரவுப்படியே தான் குண்டு வைத்ததாகவும், குண்டு வைத்தால் அந்தப் பழி முஸ்லிம்களின் மீது விழும் என்பதால் மதவெறியைத் தூண்டி முஸ்லிம்களை அழித்தொழிக்கலாம் என்ற நோக்கில் குண்டு வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளது இந்நாட்டு மக்களுக்கு உண்மையை உணர்த்தியுள்ளது. மாலேகான் குண்டு வெடிப்பு உட்பட ஏராளமான குண்டு வெடிப்புகளில் பெண் சாமியார் பிராக்யா சிங் உள்ளிட்டவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்து மக்களைக் குண்டு வைத்து கொன்றுவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டு இரு சமுதாய மக்களிடையே கலவரம் உண்டாக்கும் சங் பரிவாரத்தின் சதித்திட்டம் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வருவதால் இந்து சகோதரர்கள் இவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

முஸ்லிம்களுக்கு 6.1 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிப்பதாக புதுவை சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்து. தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போராட்டங்கள் நடத்திய பின் புதுவை மாநிலத்தில் ஒரு பகுதியில் மட்டும் இரண்டு சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதாகவும் இன்னொரு பகுதியில் அறவே இட ஒதுக்கீடு இல்லை எனவும் அறிவித்தது. இது ஒட்டு மொத்த புதுவையில் ஒரு சதவிகிதம் ஆகிறது. புதுவை அரசின் இந்த துரோகத்தை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
புதுவை சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு ஆறு சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என இப்பொதுக்குழு புதுவை அரசை வலியுறுத்துகிறது.

தேர்தல் முறையில் மாற்றம் தேவை:

இந்தியத் தேர்தல் முறையை விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் மாற்ற அரசியல் சாசனத் திருத்தம் செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் இந்திய மக்களையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

இந்தத் தேர்தல் முறையினால் மட்டுமே அனைத்து கட்சிகளும் அனைத்து சமுதாயமும் தங்களின் பலத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பெறமுடியும். மேலும் கொள்கை முரண்பாடுள்ளவர்களுடன் பொருந்தாக் கூட்டணி வைக்கும் அவலமும் இதனால் ஒழிக்கப்படும் என்று இப்பொதுக்குழு கருதுகிறது.

நோன்புக்கஞ்சி இலவச அரிசி :

ரமலான் மாதத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு சிறப்பு விலையில் அரசு வழங்கும் பச்சரிசி விநியோக முறையை இலகுவாக்கும்படி இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. சொத்துக்கள் இல்லாத ஏராளமான பள்ளிவாசல்கள் வக்பு வாரியத்தில் பதிவு செய்வதில்லை. இந்த நிலையில் வக்பு வாரியத்தின் கடிதம் கொண்டு வந்தால் தான் அரிசி தரப்படும் என்ற கொள்கை ஏற்கத்தக்கதல்ல. இதனால் ஏழ்மை நிலையில் உள்ள பள்ளிவாசல்கள் பயன்பெற முடியாது. முந்தைய திமுக ஆட்சியில் இருந்ததுபோலவே ஜமாஅத் சார்பில் பள்ளிவாசல் லட்டர்பேடில் மனு கொடுப்பதை விசாரித்து அதன் படி அரிசி வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு சில ஊர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மறுக்கிறார்கள். மனிதாபிமானமற்ற இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

மதம் மாறும் தலித்கள் :

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் கிறித்தவ மத்த்தைத் தழுவினால் அவர்கள் கிறித்தவர்களின் பிற்பட்ட பிரிவினராகக் கருதும் வகையில் அரசாணை உள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினால் அவர்கள் குறித்து அரசாணை இல்லை. இதனால் கல்வி வேலை வாய்ப்பில் இவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. இது குறித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு போட்ட பிறகும் தமிழக அரசு இதுவரை அரசாணை வெளியிடவில்லை. இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக இருந்த நடராஜ் அவர்களைச் சந்தித்து ஆதாரங்களுடன் புகார் கொடுத்தனர். பின்னர் இப்பொறுப்புக்கு வந்த நவநீத கிருஷ்ணன் அவர்களையும் சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் இன்று வரை இது குறித்து ஆணை பிறப்பிக்கவில்லை. தமிழக அரசின் இந்தப் போக்கை இப்பொதுக்குழு கண்டிப்பதுடன் உடனடியாக இதற்கு அரசாணை பிறப்பித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

பூரண மதுவிலக்கு :

மதுபானங்களும் இதர போதைப் பொருட்களும் மனிதனின் அறிவை மழுங்கச் செய்கிறது என்பதும், குடும்பத்தில் பிளவை ஏற்படுத்துகிறது என்பதும், கஷ்டப்பட்டு உழைத்த பொருளாதாரத்தைப் பாழாக்கி வறுமையை அதிகரிக்கிறது என்பதும் கொலை அடிதடி போன்ற சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது என்பதும், இல்லற வாழ்வில் ஈடுப்பாட்டைக் குறைப்பதால் கள்ள உறவுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். மானம் மரியாதையை ஒருவன் இழப்பதற்கும் போதைப் பழக்கமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இளம் வயதினர் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் கல்வி கற்பதில் அவர்களின் ஆர்வமும் ஈடுபாடும் குறைந்து எதிர்காலம் நாசமாகி வருகிறது. இன்னும் சொல்லி முடியாத கேடுகள் மதுப்பழக்கத்தால் ஏற்படுவது தெரிந்திருந்தும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்பதற்காக தமிழக அரசாங்கமே மதுக்கடைகளைத் திறந்து குடிப்பழக்கம் இல்லாத மக்களையும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்குவதை இந்த செயற்குழு கண்டிக்கிறது. வருவாயை விட நாட்டு மக்களின் நலனும் நிம்மதியும் ஒழுக்கமும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்ந்து உடனடியாக தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்று சமூக அக்கறையுடன் தமிழக அரசை இந்தப் பொதுக்குழு வற்புறுத்துகிறது.

புகையிலைப் பொருட்கள் :

மது, பீடி சிகரெட், பான்பராக், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றின் தீமைகளை மக்களுக்கு விலக்கி இப்பழக்கத்தில் இருந்து விடுபடத்தக்க வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகங்களும் கிளைகளும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

கல்விக் கூடங்களில் மதத் திணிப்பு :

சிறுபான்மை மக்கள் தனியாக கல்விக்கூடம் நடத்த அரசியல் சாசனம் உரிமை அளித்துள்ளது. இந்த உரிமையை அதிகமான கிறித்தவப் பள்ளிக்கூடங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன, கிறித்தவ மத வழிபாட்டை முஸ்லிம்களும் இந்துக்களும் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். தங்கள் சமுதாய மக்களை கல்வியில் உயர்த்திடவே இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. மதமாற்றம் செய்வதற்கு அல்ல. இப்படி சட்டத்துக்கு எதிராக நடக்கும் கல்விக் கூடங்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுப்பதுடன் இதுபோன்ற கல்விக்கூடங்களின் அனுமதியை ரத்துச் செய்யுமாறும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
சட்டம் ஒழுங்குப்பிரச்சனை ஏற்படக் காரணமாக உள்ள இது போன்ற பள்ளிக்கூடங்களை அனைத்து சமுதாய மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

வளைகுடா பணியாளர் அவலம் :

அரபு நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன்களைப் பேணுவதற்காக அனைத்து நாடுகளும் தமது தூதரகங்களில் கனிவான சிறப்பான பொறுப்பான சேவைகளைச் செய்து தங்கள் நாட்டு ஊழியர்களின் நலன்களைப் பாதுகாத்து வருகின்றன. ஆனால் அரபு நாடுகளில் இயங்கும் இந்தியத் தூதரகங்கள் இந்தியத் தொழிலாளர்கள் விஷயத்தில் திமிராகவும் ஆணவத்துடனும் பொறுப்பின்றியும் நடந்து கொள்வதாக எண்ணற்ற புகார்கள் வந்து வண்ணம் உள்ளன.

தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் தொழிலாளர்களை ஏமாற்றினாலும், ஊதியக் குறைப்பு செய்தாலும், காரணமின்றி ஆட்குறைப்பு செய்தாலும், விபத்துக்களில் சிக்கிக் கொண்டாலும், தொழிலாளர் மரணித்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத கொடுங்கோலர்கள் தான் இந்தியத் துதரகங்களில் உள்ளனர். இந்தியத் தொழிலாளர்கள் இந்தியத் தூதரகங்களை அணுகவே அஞ்சுகின்ற அளவுக்கு நிலமை மோசமாகவுள்ளது. இப்போக்கை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. மத்திய அரசு இதை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தூக்கு தண்டனை ரத்து :

குற்றங்கள் குறைவதற்கும, குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நீதி கிடைத்துவிட்டதாக மனநிறைவு அடைவதற்கும் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மனநிறைவு அடையாதவகையில் குற்றவாளிகள் மென்மையாகத் தண்டிக்கப்பட்டால் அது பாதிக்கப்பட்டவனுக்கு நீதி வழங்கியதாக ஆகாது.

மரண தண்டனை வேண்டாம் என்று கூப்பாடு போடுபவர்கள் ஏன் வேண்டாம் என்கிறார்கள் என்றால் அவர்கள பாதிக்கப்படவில்லை என்பது மட்டுமே இதற்குக் காரணமாகும்.
கொலை போன்ற குற்றங்களுக்கு கட்டாயம் மரண தண்டனை அளிக்க வேண்டும். இதுதான் பாதிக்கப்பட்டவருக்கு மனநிறைவை அளிக்கும் சரியான நீதியாகும் என்று இப்பொதுக்குழு அறிவிக்கிறது.

மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் தமது மனைவி, செல்லமாக வளர்த்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உடன்பிறந்தவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டால் மரண தண்டனை வேண்டாம்; என் பிள்ளைகள் போனால் போகட்டும் என்று சொல்வார்களா? என்பதைச் சிந்திக்குமாறு இப்பொதுக்குழு கோருகிறது.

சட்டப்படி மரண தண்டனை கொடுப்பதை எதிர்த்து மன்னிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் தங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இல்லை. தங்கள் அரசியல் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பவர்களைக் கொன்று மரணதண்டனை கொடுப்பவர்களும், தனது கருத்துக்கு எதிர்க் கருத்து சொன்னால் ஆள் வைத்து அடிப்பவர்களும், தனது வீட்டில் திருடியவனை மன்னிகாமல் வழக்குப் போடுவர்களும் தமது ஒரு ஜான் நிலத்தை ஒருவன் அபகரித்துக் கொண்டால் அதை மீட்க எந்த நிலைக்கும் செல்பவர்களும் கொலையை மன்னிக்கச் சொல்வது அயோக்கியத் தனமாகும் என்று இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது. தன்மீது துரும்பு விழுந்தாலும் மன்னிக்காமல் வாழ்நாள் முழுவதும் நடந்துகொள்வார்கள்; பாதிக்கப்பட்டவன் மற்றவன் என்றால் அப்போது மட்டும் இரக்கமும் கருணையும் பீறிட்டு வருவது வடிகட்டிய சந்தர்ப்பவாதம் என்றும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவி சோனியாவும், அவரது மகன் ராகுல் காந்தியும், ப்ரியங்கா காந்தியும் கொலையாளிகளை மன்னித்தால் அப்போது கருணை காட்டலாம். அது போல ராஜீவ் காந்தியுடன் கொல்லப்பட்ட 18 நபர்களின் மனைவி மக்களும் மன்னிக்கச் சொன்னால் அப்போது கருணை காட்டலாம். பாதிக்கப்பட்டவன் தனக்கு நீதி கிடைத்துவிட்டதாக மனநிறைவு அடைவதுதான் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது.

இதுதான் சரியான நிலைப்பாடு.
 

நியாயமான நிலைப்பாடு.மனித உயிர்களை மதிக்கும் உயர்ந்த நிலைப்பாடு.
மரண தண்டனை சரியில்லை என்று கேமராக்களின் முன்னால் காட்டுக்கூச்சல் போடுவோரும் மாநாடுகளில் தீர்மானம் போடுவோரும் இந்தக் கேள்விகளுக்கு நேர்மையான பதிலை பதிலைத் தர முடியாது.

கருணை மனு வேண்டாம் :

நமது நாட்டுச் சட்டத்தில் குறிப்பிட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்க முடியும். ஆனால் மரண தண்டனைக்குரிய குற்றத்தை ஒருவன் செய்துள்ளான் என்று கீழ்நிலை நீதிமன்றங்களில் இருந்து உச்சநீதிமன்றம் வரை நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற சட்டம் சரியானது என்றாலும் அதை அர்த்தமற்றதாக்கும் விதிவிலக்குகளையும் நமது சட்டம் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y