அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Sunday, March 03, 2013

குண்டுவெடிப்பு – கதை எழுதும் ஊடகங்கள்

ஆந்திர மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் தில்சுக் என்ற பகுதி இருக்கிறது. இங்குள்ள கொனார்க் என்ற சினிமா தியேட்டர் அருகே பிப்ரவரி 21ஆம் தேதி இரவு 7.10மணி அளவில் ஒரு வெடிகுண்டு வெடித்தது. பின்பு 5 நிமிடங்கள் கழித்து அதே பகுதியில் உள்ள ஆனந்த் ஹோட்டலில் இரண்டாவது குண்டு வெடித்தது.

அடுத்த 15நிமிடம் கழித்து வெங்கடாத்திரி என்ற தியேட்டரில் 3-வது வெடிகுண்டு வெடித்தது. இந்தக்குண்டு வெடிப்புகளில் சிக்கி இதுவரை 16பேர் இறந்துள்ளனர். சுமார் 116பேர் காயமடைந்துள்ளனர். குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ50ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
மாநில காங்கிரஸ் அரசு இறந்தவர்களுக்கு தலா 6லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. குண்டு வெடிப்பு நடந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவும், மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தேசியப் புலனாய்வு அமைப்பு மற்றும் ஆந்திரப் போலீசார் ஆகியோர் புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதற்கு முன்னால், வழக்கம் போல் இந்தக்குண்டு வெடிப்பு பழியை முஸ்லிம் இயக்கங்கள் மீது தூக்கிப்போட பலரும் படு பிராயத்தனம் செய்துவருகின்றனர். குண்டு வெடிப்பு நடந்தவுடனேயே இதற்கான வேலை ஆரம்பித்து விட்டது. இதன் மூலம் உண்மைக் குற்றவாளிகளை மறைக்கவும், அப்பாவி மக்கள் மீது குண்டு வெடிப்பு பழியை தூக்கிப் போடவும் செய்த முயற்சிகளை பட்டவர்த்தனமாக காண முடிந்தது.
இந்த குண்டு வெடிப்பிற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே செய்தியாளர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, அக்பருதீன் உவைஸிக்கும், இந்தக்குண்டு வெடிப்புக்கும் சம்பந்தம் உண்டா? என்று ஒரு செய்தியாளர் கேட்க “இல்லை அப்படித் தோன்றவில்லை” என்றார் ஷிண்டே!
ஊடகத்தில் உள்ள நடுநிலை வேடம் போடும் அயோக்கியர்கள் தான் இது போல் கேள்வி கேட்டு முஸ்லிம்கள் மீது பழியைப் போட காரணமாக இருந்து வருகிறார்கள் என்பது இந்தக் கேள்வியில் இருந்து தெரிகிறது. இந்துத்துவா சக்திகள் காரணமா என்று தான் இவர்கள் கேள்வி எழுப்பி இருக்க வேண்டும்.
இந்தக்குண்டு வெடிப்புக்கு முன்பு 2007-ம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் சாமியார் அசிமானந்த் தலைமையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சவர்க்கரால் ஆரம்பிக்கப்பட்ட ‘அபிநவ் பாரத்’ அமைப்பினர் வெடிகுண்டுகளை வெடித்து முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர்.
இந்த மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு நடந்தவுடன் இதற்காக முதலில் முஸ்லிம்கள்தான் கைது செய்யப்பட்டனர். பின்னர் சாமியார் அசிமானந்த் இந்தக்குண்டு வெடிப்பைதான், தான் நடத்தியதாக விருப்ப வாக்குமூலம் தந்தார். அதற்குப் பிறகுதான் முஸ்லிம்கள் மீதான பழி நீங்கியது.
2007-ம் ஆண்டு நடைபெற்ற இந்த மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை சுட்டிக்காட்டி, சங்பரிவாரின் கை இப்போதைய குண்டு வெடிப்பில் இருக்கிறதா என்று செய்தியாளர்களில் எவரும் ஷிண்டேவிடம் கேட்கவில்லை. ஊடகத்துறை விவாதத்தின் போதும் ஒருவரும் இந்தக் கேள்வியை கேட்கவில்லை. ஒருவருமே இந்தக் கேள்வியை எழுப்பவில்லை என்பதால் சங்பரிவாரின் மீதும் அதிக சந்தேகம் எழுகிறது.
சைக்கிளில் குண்டு வைப்பது காவி தீவிரவாதிகளின் ஸ்டைலாகும். மராட்டிய மாநிலம், மாலேகானில் இரு முறை குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இந்த இரு குண்டு வெடிப்புகளும் சைக்கிள் குண்டுகள் மூலமே நடத்தப்பட்டன. இந்தக்குண்டு வெடிப்புக்காகவும் முதலில் முஸ்லிம் இயக்கங்கள்தான் குற்றம் சாட்டப்பட்டன. முஸ்லிம்கள்தான் கைது செய்யப்பட்டனர். அதற்குப் பிறகுதான் பெண் சாமியார் பிரக்யா சிங் தலைமையிலான காவி பயங்கரவாதிகள் இந்தக்குண்டு வெடிப்பை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
தற்போது ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பும் சைக்கிளில் வைத்தே வெடிக்கப்பட்டுள்ளது. எனவே மாலேகானைப்போல இந்தக்குண்டுவெடிப்பிலும் சங்பரிவார் சம்பந்தப்பட்டிருக்குமா? என்று ஒருவர் கேட்டிருக்க வேண்டுமே!ம்கூம். ஒருவர் கூட இந்தக் கேள்வியை எழுப்பவில்லை.
இதற்கு முன்பு சங்பரிவார் நடத்திய அனைத்து குண்டு வெடிப்புகளிலும் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள்தான் பயன்படுத்தப்பட்டது. இப்போது ஹைதராபாத்தில் வெடித்த குண்டுகளிலும் அதே அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. சங்பரிவாரின் மீதான சந்தேகம் அதிகரிப்பதற்கு இது மிக முக்கியமான காரணம் ஆகும்.
“ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட உலகம் முழுவதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது. இந்தியாவில் ஹர்கதுல் முஜாஹிதீன், இந்தியன் முஜாஹிதீன், ஹர்கதுல் ஜிகாதி இஸ்லாமி, ஜெய்ஸ் -இ-முகமது மற்றும் பாகிஸ்தானைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் லஸ்கர் இ தய்யிபா ஆகிய அமைப்புகளால் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருக்கிறது. இந்தத் தாக்குதல் தற்கொலைப்படை தாக்குதலாகவோ, குண்டு வெடிப்பு, படுகொலை, கடத்திக் கொல்லுதல் போன்றவையாகவோ இருக்கலாம். அதனால் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்தது. அதன் பிறகு ஹைதராபாத் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
எனவே இது இஸ்லாமிய இயக்கங்களின் தாக்குதல்தான் என்று சிலர் கதை பரப்பி வருகிறார்கள். அமெரிக்கர்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததேதவிர ஹைதராபாத் குண்டு வெடிப்பு குறித்து அமெரிக்கா எதுவும் சொல்லவில்லை. உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்களை இந்த எச்சரிக்கை உஷார்படுத்தியதே அன்றி ஹைதராபாத் குண்டு வெடிப்பு குறித்து அது வாயே திறக்கவில்லை. அப்படி இருக்கும் போது மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் இடையில் முடிச்சு போடுவதின் பின்னணியில் காவித் தீவிரவாதத்தின் கை இருக்கிறது என்ற சந்தேகம் இயல்பாய் எழுகிறதல்லவா?
அப்சல் குருவை தூக்கில் போட்டதற்கு பழி வாங்குவோம் என்று சில இயக்கங்கள் அறிவித்தன. அந்தப் பழிவாங்கல்தான் இது என்று ராகோத்தமன் என்ற முன்னால் பாதுகாப்பு அதிகாரி தந்தி தொலைக்காட்சியில் கருத்து தெரிவித்தார். இன்னொரு முன்னால் ராணுவ உயர் அதிகாரி “2011ல் மும்பையில் சிமி அமைப்பு குண்டு வெடிப்புகளை நடத்தியது என திக்கி திணறி யோசித்து யோசித்து சொன்னதோடு இதுவும் சிமியின் வேலைதான்” என்றார். 2011-ல் மும்பையில் குண்டு வெடிக்கவில்லை. அதில் சிமியின் பெயரும் அடிபடவில்லை. இது நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரியாது. மக்களின் இந்த மறதியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இந்த முன்னாள் ராணுவ அதிகாரி முஸ்லிம்கள் குறித்த தவறான சித்திரத்தை பாமர மக்களின் மனதில் பதிய வைத்தார்.
மாநில காவல் துறையும், தேசிய புலனாய்வு நிறுவனமும் குண்டு வைத்த குற்றவாளிகளை இன்னும் அடையாளம் காணவில்லை. அதற்குள் ஊடகவியலாளர்கள் இவர்கள்தான் குற்றவாளிகள் என முடிவு செய்து தீர்ப்புரை எழுதிவிட்டார்கள். அவ்வாறு சொல்வதைவிட விசாரணையின்போக்கு இந்த விதத்தில்தான் இருக்க வேண்டும் என்று கோடு போட்டு காண்பித்து விட்டார்கள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு, நான்டெட் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, ஹைதராபாத் மக்கா மஜ்ஸித் குண்டு வெடிப்பு போன்ற குண்டு வெடிப்புகளின்போது இப்போது போடும் இதே கோட்டைத்தான் அப்போதும் ஊடகங்கள் போட்டன. இவர்கள் வகுத்துத் தந்த கோட்டின் வழியாக சென்று போலீசார் முதலில் முஸ்லிம்களைக்கைது செய்தனர்.  
கடைசியில் ஊடகங்கள் போட்ட கோடு, தப்புக் கோடாகி குண்டு வைத்த சங் பரிவாரை காப்பாற்றுவதற்காக இவர்கள் போட்ட சதிக் கோடு இது என்பதை போலீசார் புரிந்து, சங் பரிவாரை சேர்ந்த உண்மை குற்றவாளிகளைக்கைது செய்தனர்.
இதற்குப் பிறகும் ஊடகங்களுக்கு கொஞ்சமும் வெட்கம் வரவில்லை. குண்டு வெடிப்புகளின்போது காவிகள் போட்ட கோடு ஏற்கனவே தப்புக் கோடாகி விட்டதே! இனிமேல் இதுபோல் எப்போதும் நடந்துகொள்ளக் கூடாது என்ற அறிவு அவர்களுக்கு இல்லை. எனவே வழக்கம் போல இந்த ஹைதராபாத் குண்டு வெடிப்பின் போதும் அவர்கள் தங்கள் சில்லரைத்தனத்தை தவறாமல் செய்தனர்.
இது மத்திய, மாநில அரசுகளின் காவல்துறை மிக கவனமாக செயல்பட வேண்டிய நேரமாகும். புலனாய்வு அமைப்புகள் - ஊடகங்கள் காட்டும் பாதையில் தங்கள் விசாரணையைக் கொண்டு செல்லக் கூடாது. மாறாக குண்டு வெடிப்பு குற்றவாளிகளை நோக்கியே விசாரணை செல்ல வேண்டும்.
இதற்கு முன்பு இந்தியாவின் பல இடங்களில் காவித் தீவிரவாதிகள் வைத்த குண்டுகளுக்காக முதலில் முஸ்லிம்களைக்கைது செய்து மூக்குடை பட்டதுபோல இந்த முறையும் மூக்குடைபட்டு, நிற்கக்கூடாது.
ஹைதராபாத் குண்டு வெடிப்பு காவித் தீவிரவாதிகள் செய்தார்கள் என்றோ, நக்சல் தீவிரவாதிகள் செய்தார்கள் என்றோ, முஸ்லிம் அமைப்புகள் செய்தார்கள் என்றோ காவல் அமைப்புகள் முதலில் முடிவெடுத்து செயல்பட வேண்டாம்.
கிடைக்கும் துப்புகளைவைத்து குற்றவாளிகளை இனம் காணுங்கள். இதற்கு முன்பு காவி தீவிரவாதிகள் நடத்திய எந்தக்குண்டு வெடிப்பையும் காவல் துறை துப்பறிந்து கண்டுபிடிக்கவில்லை. மாறாக சாமியார் அசிமானந்த் தந்த விருப்ப வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே காவித் தீவிரவாதிகளை அடையாளம் கண்டது. இப்போதும் அதுபோல காவல்துறை நடந்துகொள்ளக் கூடாது.
தீவிரவாதத்திற்கு இனம், மதம், மொழி கிடையாது. இதைப் புரிந்து கொண்டு காவல்துறை செயலாற்றினால் உண்மைக் குற்றவாளிகளை இனம் காணலாம். அவ்வாறு இல்லாமல் மற்றவர்கள் காட்டும் வழியில் காவல்துறை நடைபோட்டால் அப்பாவிகள் குற்றவாளிகளாக்கப்படுவார்கள். அப்பாவிகளை தூக்கில் போட வேண்டும் என்று குற்றவாளிகள் கூக்குரலிடுவார்கள். நீதியைச்சாகடிக்கும் இந்த செயலுக்கு காவல்துறை உடந்தையாக இருக்காமல் இனி இந்தியாவில் குண்டு வெடிப்பே நடக்காத அளவுக்கு புலனாய்வு செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களை வேறோடு பிடுங்கி எறிய வேண்டும்.
ஹைதராபாத் குண்டு வெடிப்பை இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தினர் நடத்தினார்கள் என்று காட்ட பி.ஜே.பி.காரர்கள் படும்சிரத்தை எடுக்கிறார்கள். இப்படித்தான் இதற்கு முன்பு மாலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து குண்டு வெடிப்புகளிலும் இவர்கள் காவல்துறைக்கு தவறான வழியைக்காண்பித்தனர். பின்னர் காவல்துறை சுதாரித்துக்கொண்டு பெண் சாமியார் பிரக்யா சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தபோது அத்வானி உள்ளிட்ட பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் பெண் சாமியார் பிரக்யா சிங்கை சிறைக்குள் சென்று பார்த்து நலம் விசாரித்தார்கள். பின்பு சிறைக்கு வெளியே வந்து செய்தியாளர்களைச்சந்தித்து “பெண் சாமியார் பிரக்யா சிங் போன்றோர் அப்பாவிகள். அவர்களோடு நான் பழகி இருக்கிறேன். அவர்களை இந்த அரசு கொடுமைப்படுத்துகிறது” என்று அத்வானி பேட்டியளித்தார்.
பின்னர் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களை அழைத்துக்கொண்டு குடியரசுத் தலைவரைச்சந்தித்து பிரக்யா சிங்கை விடுதலை செய்யவேண்டும் என மனுவும் கொடுத்தார். காவித் தலைவர்களின் இந்த பச்சோந்தி நாடகத்திற்கு காங்கிரஸ் அரசு முன்பு ஜால்ரா தட்டியது. இப்போது அதுபோல் எதுவும் நடக்கக் கூடாது.
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 11-மாநில சட்ட மன்றத் தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலின்போது மனுநீதி கட்சிகள் அனைத்தும் மண்ணுக்குள் புதைக்கப்படுவது உறுதி.
 

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y