தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலை கூட எடுக்கக்கூடாது என்பது குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள். தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று கருத்து சொல்லாவிட்டால் நமது கோரிக்கைகளை எவ்வாறு வென்றெடுக்க முடியும்?
மசூது, கடையநல்லூர்.
எங்களின் இந்தக் கோரிக்கையை ஏற்றால் நாங்கள் தேர்தலில் வாக்களிப்போம் என்று சொல்லும்போது கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பு உள்ளது என்பது உண்மைதான். இதற்காகவே இந்த நிலைப்பாட்டை இது வரை நாம் எடுத்து வந்தோம்.
ஆனால் வேறு வழியில் கோரிக்கைகளை வெல்ல முடியும் என்பதாலும் ஆதரவு நிலைபாட்டினால் நன்மையை விட கேடுகளே அதிகம் என்பதாலும் இது மறு பரீசீலனைக்கு உரியது என்று முடிவு எடுக்கப்பட்டது.
உயர்நிலைக் குழுவில் வைக்கப்பட்ட காரணங்களைக் கீழே தருகிறோம்.
முதல் காரணம்
தமிழக முஸ்லிம்களைப் பொருத்தவரை பெரும்பாலானவர்கள் மாநிலத்தில் உள்ள கட்சிகளின் அபிமானிகளாகவும், விசுவாசிகளாகவும் உள்ளனர். நம்முடைய பிரச்சாரத்தின் மூலம் இதில் ஓரளவு நாம் வெற்றி பெற்றாலும் முழு வெற்றி பெறவில்லை.