அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Thursday, October 25, 2012

டெங்கு காய்ச்சல் ..அவசியம் அறிய வேண்டியவை


டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். அநேகமான டெங்கு காய்ச்சல், மிக சாதாரண காய்ச்சல் போலவே இருந்து, அதனால் பாதிக்கப்பட்டவர் எளிதில் அதில் இருந்து மீண்டு விடுவர்.. மிக குறைந்த சதவிகிதத்திலான டெங்கு காய்ச்சல் தான், மிக மோசமான பாதிப்புகளையும் , உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்தக் கூடியது.

இது சாதரணமாக, திடீரென பாதிப்பை ஏற்படுத்தி, அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், மூட்டு வலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை கலர் மாற்றம் ஏற்படுத்தும். இதில் குறிப்பாக ஜுரம், தோல் நிற மாற்றம், தலைவலி தான் எல்லா டெங்கு நோயாளிகளுக்கும் அனேகமாக இருக்கும் மூன்று நோய் அறிகுறிகளாகும். இதுபோக இரத்தக் கசிவுகளை ஏற்படுத்தலாம்.

இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கடுமையாக பாதிக்கும்.இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் உண்டாக்கப்படுவதால், ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். ஆனால் ஒரு வகை டெங்கு வைரசால் பாதிக்கப்பட்டால், அந்த வகை வைரஸுக்கு மட்டும், வாழ்நாள் முழுவதும், நோய் எதிர்ப்பு தன்மை உருவாகி விடும். தவிர மற்ற வகை வைரஸுக்கு எதிராக, நோய் எதிர்ப்புத் தன்மை வராது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான மூட்டு மற்றும் தசை வலியால் பாதிக்கப்படுவதால், இதற்கு எலும்பு ஒடியும் நோய் BREAKBONE என்று பெயர்.

டெங்கு இரத்த கசிதல் நோய் (Dengue hemorrhagic fever) என்பது மிக தீவிரமான தன்மை கொண்டது. உடலில் தோலில் இரத்தக் கசிவு, மூக்கில் இரத்தம் வடிதல், வாய் ஈறுகளில் இரத்தம் வருதல், கருப்பு மலம், இரத்த வாந்தி ஆகியன ஏற்படலாம். இந்த வகையான டெங்கு இரத்தக் கசிவு நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் dengue shock syndrome என்னும் மிக ஆபத்தான நிலைக்கும் ஏன் இறப்பு வரை கூட கொண்டு சென்று விடும்.

எப்படி பரவுகிறது?

ஏடிஸ் ஈஜிப்டி (Aedes aegypti) என்னும் உடலில் கோடுள்ள, பகலில் கடிக்கும் கொசு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்தக் கொசு நோயால் பாதிக்க பட்ட ஒரு நபரைக் கடித்து தன்னுள் வைரஸை எடுத்து, அந்த கிருமியை மற்றவர்களுக்குப் பரப்புகிறது. இந்தக் கொசு அநேகமாக வீட்டினுள் பதுங்கி இருக்கும். இந்தக் கொசு அநேகமாக மழை காலங்களில் இனப்பெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில், தண்ணீர் தேங்கும் பூச்சாடிகள், பிளாஸ்டிக் பைகள், கேன்கள், தேங்காய் சிரட்டைகள்,, டையர்கள், போன்றவற்றில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த வைரஸ் கொசுக்கடி மூலம் இல்லாமல், நேரிடையாக நோயாளிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவாது.நோயாளிடம் இருந்து, கொசுக்குள் போய் பின்னர் தான் அடுத்த மனிதர்க்கு பரவும்.. நோயாளியைத் தொடுதல், அருகில் இருத்தல் மூலம் பரவாது.

டெங்கு அறிகுறிகள்:-

கொசு கடித்து, வைரஸ் கிருமி உடலில் சென்று , நோய் அறிகுறி தெரிய வர 5 முதல் 15 நாட்கள் வரை ஆகும். ஆரம்பத்தில் குளிர் ஜுரம், தலைவலி, கண்ணைச் சுற்றி வலி, முதுகு வலி, பின்னர் கடுமையான கால் மற்றும் மூட்டு வலி சில மணிநேரத்தில் வரும். காய்ச்சல் 104 f போகலாம்,. இலேசாக, நாடித்துடிப்பு குறைதல், இரத்த அழுத்தம் குறைதல், வரலாம்.கண்கள், சிவந்து போகலாம். தோலில் சிகப்பு நிற மாற்றம் ஏற்படும்.கழுத்து மற்றும் பிறப்பு உறுப்பு அருகே நெறிகட்டலாம். இந்த ஜுரம் மற்றும் மற்ற நோய் அறிகுறிகள் 2 முதல் 4 நாள் வரை இருந்து,பின்னர் திடீரென ஜுரம்  குறைந்து, அதிகமான வியர்வை ஏற்படும். இந்தக் காலகட்டத்தில், உடல் வெப்பம் நார்மலாக இருந்து , நல்ல ஆரோக்கியமாக இருப்பது போல் தோன்றும். இந்த காலகட்டம் தான், அநேகர் தாம் நோயிலிருந்து மீண்டுவிட்டோம் என்று அலட்சியமாக இருந்து விடுவர். இந்தக் காலகட்டத்தில் தான் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.(எல்லா டெங்கு காய்ச்சலும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கவோ அல்லது மிக மோசமான உடல் பாதிப்பை ஏற்படுத்தவோ செய்யாது. மிகக் குறைந்த சதவிகிதத்திலான டெங்கு தான், மிக மோசமான உடல் பாதிப்பை ஏற்படுத்தும்.

சில நாட்கள் கழித்து மீண்டும் ஜுரம் மற்றும் தோலில் கலர் மாற்றம் , முகம் தவிர எல்லா பகுதியிலும் தோன்றும். உள்ளங்கை மற்றும் கால் பாதம் சிவந்து தடிக்கலம்.

டெங்கு : எப்படி கண்டுபிடிப்பது?

டெங்கு நோயின் ஆரம்ப கால அறிகுறி, மற்ற வைரஸ் நோய் போல் இருந்தாலும், டெங்கு பரவும் காலகட்டத்தில், இந்த நோய் பரவும் பகுதியில் இருந்தாலோ, அல்லது அந்தப் பகுதிக்கு போய் வந்தாலோ, , மேற் சொன்ன நோய் அறிகுறி இருந்தால், டெங்கு இருக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கருதி மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். டாக்டர்கள் பிரத்யோக இரத்த டெஸ்ட் மூலம் இந்த நோயைக் கண்டு அறிவர்.

டெங்கு-சிகிச்சை முறை

இதற்கு தனியான மாத்திரை மருந்துகள் கிடையாது. காய்ச்சலைக் குறைக்க சாதாரண பாரசெடமோல் மாத்திரை ,போதிய ஒய்வு , நன்றாக நீர் ஆகாரங்கள் உட்கொள்ளுதல் தான் இதற்கு சிகிச்சை..மருத்துவர் அறிவுரை இல்லாமல், வலி நிவாரண மாத்திரை  எடுத்தல், இரத்த இழப்பு அதிகமாகலாம்.1% குறைவான டெங்கு தான் உயிரிழப்பில் போய் முடியும்,

Dengue Hemorrhagic Fever என்னும் டெங்கு இரத்த கசிதல் ஜுரம்:-

இந்த வகையான டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்று வலி, இரத்தக் கசிவு மற்றும் ஷாக் என்ற மோசமான உடல்நிலை உருவாகும். இந்த வகை டெங்கு மூலம் தொடர்ந்து அதிக ஜுரம், தலைவலி வரும். இருமல், வாந்தி,குமட்டல், வயிற்று வலி வரலாம்.2 முதல் 6 நாட்கள் கழித்து கை கால்கள் குளிர்ந்து போய், நாடித்துடிப்பு குறைந்து, வாயைச் சுற்றி நீல நிறமாகி மோசமான நிலைக்குக் கொண்டு சென்று விடும்.

தோலில் இரத்தக் கசிவு, இரத்த வாந்தி, மலத்தில் இரத்தம் போய் கருப்பு மலம், பல் ஈரலில் இரத்த கசிவு, மூக்கில் இரத்தம், போன்ற ஏதாவது ஒன்று வரலாம். நிமோனியா வரலாம். இதயம் பாதிக்கலாம்.

இதற்கு சிகிச்சை, மருத்துவ மனையில் அனுமதித்து, இரத்த குழாய் வழியாக நீர் ஏற்றுதல். இரத்தத்தில் தட்டை அணுக்கள் என்னும் platelet குறைந்து இரத்தக் கசிவு ஏற்படுவதால், தொடர்ந்து தட்டை அணுக்கள் அளவைப் பரிசோதித்து, அது மிகவும் குறைந்தால், இரத்த தட்டை அணுக்கள்  என்னும் Platelet transfusion பண்ண வேண்டும். ஷாக் என்னும் dengue shock syndrome வந்தால், அதற்காக பிளாஸ்மா என்ற வகை இரத்தம் செலுத்தப்பட வேண்டும்.

டெங்கு தடுக்கும் முறை:-

வைரஸ் ,நோயாளிடம் இருந்து கொசு மூலம் பரவும் சுழற்சியைத் தடுக்க வேண்டும். அதனால், நோயாளிகளை, கொசுவலைக்குள் சுகம் ஆகும் வரை வைக்க வேண்டும். இதனால் அந்த நோயாளிகளிடம் இருந்து கொசு மூலம் மற்றவருக்கு நோய் பரவுவதை தடுக்கலாம்.

· டெங்கு வைரஸைப் பரப்பும், ஏடெஸ் கொசுவின் இனவிருத்தியை எல்லா நிலையிலும் தடுக்கவேண்டும். இந்தக் கொசு பொதுவாக வீட்டினுள் இருந்தாலும், தன இனவிருத்தியை, வீட்டில் மிக எளிதாக இருக்கும் சுத்தமான , தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில் தான் செய்கிறது.

டெங்கு வைரஸைப் பரப்பும் கொசுவான aedes கொசுவை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த வேண்டும்.பழைய டயர், தூக்கி வீசிஎறியபட்ட பூச்சாடி, பிளாஸ்டிக் பைகள், கேன்களில் தண்ணீர் சேராதவறு பார்க்கவேண்டும். தேவையற்ற அதுபோன்ற பொருள்களை அகற்றி விடவேண்டும்.

தண்ணீர் பீச்சும் கேன்களில், தண்ணீர் இல்லாதவாறு தலைகீழாக வைக்கவேண்டும்.

வீட்டில் வளர்க்கப்படும் , பூ தொட்டியில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.. தொட்டியின் கீழ் உள்ள plateஐ , நன்றாக சுத்தம் செய்து, அதில் ஒட்டிக் கொண்டு இருக்கும் கொசு முட்டைகளை நீக்கி விட வேண்டும்.

பூந்தொட்டியில் உள்ள மணலை கிளறி மிருதுவாக்க வேண்டும்.மண் கட்டியாக இருந்தால், தண்ணீர் தேங்கி, கொசு இனவிருத்தி செய்ய ஏதுவாக அமையும்.

தண்ணீர் வடிந்து ஓடும் drain  களில், தண்ணீர் ஓட்டத்தைத் தடை செய்யாமல் பார்த்து கொள்ளவேண்டும். முக்கியமாக வீட்டின் மொட்டை மாடி போன்றவற்றில்

மிக அரிதாக உபயோகபடுத்தப்படும் தண்ணீர் சேர வாய்ப்பு உள்ளவைகளை மூடியே வைக்க வேண்டும்.

AC இல் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தேக்கும் TRAY  வைக்ககூடாது. அந்த தண்ணீர் எந்த தடையும் இன்றி கழிவில் கலக்குமாறு செய்ய வேண்டும்.

பூச்சாடி  என்னும் flowervase உள்ள தண்ணீரை ஒரு நாள் விட்டு ஒருநாளைக்கு மாற்ற வேண்டும்.பூச்சாடியின் உள்புறத்தை, நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.செயற்கை பூக்கள் மற்றும் தாவரத்தின் வேற்பகுதியை நன்றாக கழுவி அதில் கொசு முட்டை இருந்தால் நீக்கி விடவேண்டும்.

வீட்டில்  மற்றும் தோட்டத்தில் உள்ள drain களில், விழுந்து அடைக்க வாய்ப்புள்ள இலைகள், குப்பைகளை நீக்கி , தடையின்றி நீர் வடிந்து செல்லும் வழியை ஏற்படுத்த வேண்டும்.

வீட்டில் உபயோகப்படுத்தாத கக்கூஸ்களில், கொசு இனவிருத்தி செய்யும் வாய்ப்பு உண்டு.அந்த மாதிரி கழிப்பிடங்களை, அடிக்கடி சுத்தம் செய்து , கழிப்பிட பீங்கான்களை மூடி வைக்க வேண்டும்.

தண்ணீர் கஷ்ட காலங்களில், தண்ணீரைப் பாத்திரங்களில் மூடி வைக்கும் நிலை ஏற்பட்டால், இரண்டு நாளுக்கு மேல் வைக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதை நன்றாக மூடி, கொசு அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

நீர்த் தேக்க தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்..

கொசு கடிக்காமல், கை கால் களைநன்றாக மூடி வைக்க வேண்டும். கொசுவலைகளைப் பயன்படுத்தலாம்,.. வீட்டு கதவு ஜன்னல்களுக்கு கொசு வலை அடித்து கொசு அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். கொசுவை விரட்டும் புகைகள் உபயோகப்படுத்தலாம்.. ஆனால் சிலருக்கு இது சுவாச அலர்ஜி ஏற்படுத்தலாம்.

உடலில் தேய்க்கும் கொசு ஒலிப்பான் மருந்தான deet உபயோகப்படுத்தலாம். ஆனால் சிலருக்கு தோல் அலர்ஜியை இது உண்டு பண்ணலாம்.

இந்தக் கொசு பகல் நேரத்தில் அதிலும் குறிப்பாக சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் அதிகம் கடிக்கும்.

அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம், கொசு விரட்டும் புகை மற்றும் மருந்து தெளிப்பது மூலம் கொசுவை ஒழிக்கலாம்

நீர் சேர்ந்து இருக்கும் இடங்களில், கொசுவின் லார்வா வை ஒழிக்கும் மருந்துகளை அடிப்பதன் மூலம், கொசுவின் வாழ்க்கை சுழற்சி லார்வாவிலே நிறுத்தப்பட்டு, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறாமல் தடுக்கலாம்.

சுருங்கச் சொன்னால், கொசுவை ஒழிப்பதன் மூலமும், கொசு கடிக்காமல் பார்ப்பதன் மூலமே இதைத் தடுக்க ஒழிக்க முடியும்.

நன்றி - உணர்வு

டாக்டர் டி. முஹம்மது கிஸார்,

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y