அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Sunday, December 23, 2012

நள்ளிரவில் வீடு புகுந்து முஸ்லிம்கள் கைது! காவல்துறை அராஜகம்!! – டிஎன்டிஜே முற்றுகைப்போர்!!!

நள்ளிரவில் வீடு புகுந்து முஸ்லிம்கள் கைது!
காவல்துறை அராஜகம்!! –
டிஎன்டிஜே முற்றுகைப்போர்!!!
டிசம்பர் 21ஆம் தேதி அன்று உலகம் அழியப்போவதாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்ட புரளி குறித்து தெளிவுபடுத்துவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – தென்சென்னை மாவட்ட ஜாம்பஜார் கிளை சார்பாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
கடந்த உணர்வு 17 : 17 இதழில் 18ஆம் பக்கத்தில் வெளியியான, “டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதா? – கலவர பீதி கிளப்பி காசு பார்க்கும் ஊடகங்கள்! அறியாமையில் மக்கள்!!” என்ற செய்தியை துண்டுபிரசுரமாக அந்தக் கிளையினர் விநியோகம் செய்துள்ளனர்.

இந்த துண்டுபிரசுரம் விநியோகித்தற்காகத்தான் தென்சென்னை மாவட்ட ஜாம்பஜார் கிளை தலைவர் யாகூப் அவர்களை நள்ளிரவு 2.30 மணிக்கு திருவல்லிக்கேணி பகுதி ஏ.சி.செந்தில் குமரன் என்பவரது தலைமையில் சென்ற காவல்துறையினர் கைது செய்து நள்ளிரவு வேட்டையாடியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தென்சென்னை மாவட்டத் தலைவர் அப்துர்ரஹீம், மாவட்ட துணைச் செயலாளர் நூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் வீடுகளிலும் அத்துமீறி புகுந்த காவல்துறையினர் தகாத வார்த்தைகளில் அங்கிருந்த பெண்களை ஏசி உள்ளனர்.

நமது நிர்வாகிகளின் வீடுகளில் இருந்த பெண்கள், “எங்களது வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாத சமயத்தில், அதுவும் நள்ளிரவு நேரத்தில் அத்துமீறி எப்படி நீங்கள் நுழையலாம்? அப்படி ஆண் போலீஸ் மட்டும் தனியாக நுழையலாமா? மீறி நுழைவதாக இருந்தால் பெண் போலீஸை அழைத்து வாருங்கள் என்று சொல்ல, அதையும் உதாசீனப்படுத்திய காவிக்கரை படிந்த காவல்துறையினர் நமது சகோதரிகள் இருந்த வீடுகளில் அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுகளைக் காலில் போட்டு மிதித்து முஸ்லிம்கள் வீட்டில் நள்ளிரவு சோதனை நடத்திய காவல்துறையினர் அங்கிருந்த முஸ்லிம் பெண்களை கேவலமான அறுவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமல்லாமல் நமது சகோதரர்கள் வீடுகளுக்குள் நள்ளிரவில் படுக்கையறை வரை புகுந்து சோதனை செய்கின்றோம் என்ற பெயரில் இந்தக் கேவலச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

அன்றைய தினமே அதிகாலை 4.30 மணிக்கு டி-1 காவல்நிலையத்திற்கு மாநிலச் செயலாளர் யூசுப் தலைமையில் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் கமர்தீன், அப்துல்லாஹ் ஆகியோர் அடங்கிய குழுவினர் சென்றனர். இந்த சம்பவத்திற்கு சூத்திரதாரியாக இருந்த ஏ.சி.செந்தில் குமரனைச் சந்தித்து, “இப்படி நள்ளிரவில் புகுந்து கைது செய்துள்ளீர்களே! இது சரியா? எனக்கேட்டதற்கு, நாங்கள் கைது செய்தது சரிதான். உங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார். இவர்கள் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக இந்தச் சதி வேலையைச் செய்துள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிய வந்தது.

முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு:
உடனடியாக தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். முஸ்லிம்கள் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து அராஜகம் செய்த காவல்துறையின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், இதற்கு சூத்திரதாரியாக செயல்பட்ட திருவல்லிக்கேணி ஏ.சி.செந்தில் குமரன் என்பவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் டி-1 காவல்நிலையத்தை சம்பவம் நடந்த அதே தினமான சனிக்கிழமை மாலை 4மணிக்கு முற்றுகையிடுவதாக காலை 11மணிக்கு, டிஎன்டிஜே தென்சென்னை மாவட்டம் சார்பாக அறிவிப்புச் செய்யப்பட்டது.
குறித்த நேரத்திற்கு முன்னரே மக்கள் காவல்நிலையத்திற்கு அருகில் குவியத் தொடங்கினர்.

மிகப்பெரிய மக்கள் திரள் திரள உள்ளதாக உளவுத்துறை மூலம் அறிந்த காவல்துறை, போராட்டக் களத்தில் போராட்டம் துவங்குவதற்கு முன்பாகவே வலுக்கட்டாயமாக கைதுப் படலத்தைத் துவக்கினர்.
நீங்கள் கைது செய்வதற்கு நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம். எங்களது உணர்வுகளை மக்கள் மத்தியில் வெளிக்காட்ட விடுங்கள். பிறகு நாங்களே கைதாகின்றோம் என்று நமது மாநில நிர்வாகிகள் கூற அதையும் கேட்காத காவல்துறை நமது சகோதரர்களை வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனங்களில் ஏற்ற முயற்சிக்க அங்கு நடந்த தள்ளுமுள்ளின் காரணமாக தடியடி நடத்தி நமது சகோதரர்களுக்கு இரத்தக்களறியை ஏற்படுத்தினர்.

மற்ற கூட்டங்களிலெல்லாம் யார் மீதும் தடியடி நடத்தப்பட்டால் அவர்கள் அனைவரும் ஓடிவிடுவார்கள். ஓட்டமெடுத்ததன் விளைவாக அந்த இடத்தில் போராட்டம் நடந்ததற்குண்டான எந்த அறிகுறிகளும் தெரியாத வண்ணம் அந்த இடம் மாறிவிடும்.

ஆனால் நமது சகோதரர்களோ எதற்கும் அஞ்சாமல் உறுதியோடு நின்றதைக் காணும்போது நமது சகோதரர்கள் எப்படி வார்த்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரிந்தது. தடியடி நடத்துவதே கூட்டம் கூடவிடாமல் கலைப்பதற்குத்தான். ஆனால் தடியடி நடத்தப்பட்ட பிறகுதான் மக்கள் சாரை சாரையாக அணிவகுத்து அதே இடத்தில் குழுமத் தொடங்கினர்.
சிறிது நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆக்ரோஷத்துடன் காவல்நிலயத்தை முற்றுகையிட்டனர். போலீஸ் அராஜகம் ஒழிக என்ற கோசங்கள் விண்ணைப் பிளந்தன.

பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் முற்றுகையிட்டனர். ஆயிரத்திற்கும் நெருக்கமான சகோதர, சகோதரிகள் கைது செய்யப்பட்டு பல மண்டபங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகும் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் ஆக்ரோசத்துடன் கோசமிட்டுக் கொண்டு முற்றுகையில் ஈடுபட்டனர்.

இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கொந்தளித்த கொதிப்பின் வெளிப்பாடு மக்களது முகங்களில் தெரிந்தது. உணர்ச்சிப் பிளம்பில் வெகுண்டெழுந்த மக்கள் அனைவரும் கைது செய்து வாகனங்களில் ஏற்றும் வரை அவர்களை ஆசுவாசப்படுத்தி போராட்டக்களத்தில் நிற்க வைப்பது கடினமான காரியமாக தென்பட்டது.

அனைவரையும் கைது செய்து ஏற்றிச் செல்லும் அளவிற்கு காவல்துறையில் வாகன வசதியும் இல்லை. அவர்கள் கொண்டு வந்த வாகனங்களும் போதவில்லை. எனவே உடனடியாக மாநிலச் செயலாளர் யூசுப் அவர்கள் ஒரு அறிவிப்பைச் செய்தார்.

கட்டுப்பட்டு நடந்த கட்டுப்பாடு மிக்க கூட்டம்:
மக்கள் குறைவாக இருந்தபோது, சொற்பமான மக்களை போராட்டம் துவங்குவதற்கு முன்பாகவே கைது செய்ய நிர்பந்தப்படுத்தி தடியடி நடத்தினீர்கள். ஆனால் இப்போது எங்களைக் கைது செய்ய உங்களுக்கு வாகனங்கள் போதவில்லை.

நீங்கள் எங்களைக் கைது செய்ய பலவந்தப்படுத்தி தடியடி நடத்தியுள்ளீர்கள். இந்த தடியடிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். எங்களது உரிமைகளைப் பெறுவதற்காக உயிரையும் கொடுக்கத் தயங்கமாட்டோம். அப்படிப்பட்ட கொள்கை உறுதி மிக்க கூட்டம்தான் இந்தக்கூட்டம்.
இதுபோன்ற பல தடியடிகளையும், இன்னல்களையும் சந்தித்துத்தான் நாங்கள் இங்கு நின்று கொண்டிருக்கின்றோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, அனைவரும் எந்தவிதமான சப்தமுமில்லாமல் அமைதியான முறையில் கலைந்து செல்ல வேண்டும் எனவும் மாநிலச் செயலாளர் யூசுப் அவர்கள் கட்டளையிட்டதும் அனைவரும் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.

பேச்சுவார்த்தைக்கு அழைத்த காவல்துறை:
அனைவரும் அமைதியான முறையில் கலைந்து சென்றதும் காவல்துறையினர் நமது மாநில நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஜாயிண்ட் கமிஷனர் ரவிக்குமார் மற்றும் டி.சி.கிரி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.

இரவு 7மணிக்கு ஆரம்பமான பேச்சுவார்த்தை 1மணி நேரம் நீடித்தது. அதில் நள்ளிரவுக் கைதுக்கு வருத்தம் தெரிவித்த காவல்துறை உயர் அதிகாரிகள், தடியடி நடத்தியதற்கும் வருத்தம் தெரிவித்தனர்.

ஏற்கனவே 23 முஸ்லிம் அமைப்புகள் சேர்ந்து போராட்டம் நடத்துவதாகச் சொல்லி அதில் பலவிதமான அசம்பாவிதங்களை அரங்கேற்றி, முஸ்லிம் அமைப்புகள் என்றாலே அவர்கள் இப்படித்தான் என்ற அவப்பெயரை ஏற்படுத்திவிட்டனர். அதுதான் இந்த தடியடியை கீழ்மட்ட போலீசார் நிகழ்த்துவதற்குக் காரணம் என்றும், தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டதாகவும், இனியொருகாலம் இதுபோல நடக்காது என்றும் கூறி, மண்டபத்தில் கைது செய்து வைத்துள்ளவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க உத்தரவிடுவதாகவும் அவர்கள் கூறினர். ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை திரும்பப் பெறுவது குறித்தும் பேசப்பட்டது.
கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நமது சகோதர, சகோதரிகள் இரவு 8.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன் துண்டுப்பிரசுரம் வினியோகம் செய்ததற்காக கைது செய்யப்பட்டவர் மீது போடப்பட்ட வழக்கை திங்கட் கிழமை நீதிமன்றத்தில் திரும்பப்பெறுவதாகவும் உறுதியளித்தனர்.

ஒரு காலத்தில் முஸ்லிம்கள் தி.மு.க.வின் வாக்கு வங்கிகளாக இருந்தனர். கருணாநிதி ஆட்சியில் டிசம்பர் ஆறு வரும்போதெல்லாம் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து காவல் துறையினர் நடத்திய வெறியாட்டம் காரணமாக தி.மு.க.வை முஸ்லிம்கள் நஞ்சென வெறுத்தனர். முஸ்லிம்கள் தக்க பாடம் கற்பித்தவுடன் இந்த அராஜகம் முடிவுக்கு வந்தது.
அதே அராஜகத்தைத்தான் செந்தில் குமரன் என்ற காவி அதிகாரி மூலம் அ.தி.மு.க. அரசு ஆரம்பித்து வைத்துள்ளது.

வினியோகிக்கப்பட்ட பிரசுரம் வழக்குப் பதிவு செய்யத் தக்கதல்ல என்றாலும் ஒரு வேளை வழக்குப் போடுவதாக இருந்தால் தவ்ஹீத் ஜமாத்துக்கு தெரிவித்தால் வழக்கு போடப்பட்டவர்களை போலீஸில் அல்லது நீதி மன்றத்தில் ஒப்படைக்க தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்காகவே காவிச் சிந்தனையுடன் இந்த அராஜகம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கொலை கொள்ளை போன்ற பாதகச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் அதைக் தடுக்க வக்கில்லாத காவல் துறையினர் நோட்டீஸ் கொடுத்ததற்காக இப்படி நடந்து கொண்டது முஸ்லிம்களை அச்சுறுத்தவும் அவர்களின் உரிமைகளைப் பறிக்கவும் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதில் சந்தேகமில்லை.

போடப்பட்ட பொய் வழக்கு வாபஸ் பெறப்பட்டால் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என்ற போதும் எதிர்காலத்தில் இது போல் நடக்காமல் இருக்க செந்தில் குமரன் உள்ளிட்ட காவி அதிகாரிகள் மீது நடவடிக்கையை வலியுறுத்தவும் அதை வென்றெடுக்கவும் எத்தகைய வழிமுறையைக் கையாள்வது என்பது குறித்தும் நிர்வாகக் குழு கூடி தக்க முடிவை அறிவிக்கும். இன்ஷா அல்லாஹ்!

அதிமுக அரசு இனிமேல் காவிச் சிந்தனையுடன் தான் நடக்கும் என்ற அறிகுறிகள் அதிகமாகி வருகின்றன. முஸ்லிம்களின் எதிர்காலம் கவலைக்குரியதாக இருக்கக் கூடாது என்பதற்கு ஏற்ற நடவடிக்கையை தவ்ஹீத் ஜமாஅத் செய்யும். எந்த அடக்குமுறைக்கும் இந்த ஜமாஅத் அடங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

துண்டுபிரசுரத்தில் இருந்தது என்ன? :
தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக விநியோகம் செய்யப்பட்ட துண்டுபிரசுரத்தில் “உலகம் அழியப்போகின்றது என்று பரப்பப்படும் பீதிக்குள்ளான மக்களை ஆசுவாசப்படுத்தும் வகையிலும், எப்போது உலகம் அழியும் என்பது குறித்த செய்திகளை அல்லாஹ்வும், அவனுடைய இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் எப்படி தெளிவுபடுத்தியுள்ளார்கள் என்ற செய்திகளையும் கொண்டவையாக அமைக்கப்பட்டிருந்தன.

அதில் கடலூரில் உள்ள வடலூரில் வள்ளலார் ஏற்றிவைத்த தீபம் அணைந்துவிட்டதாகவும், வள்ளலார் ஏற்றிவைத்த தீபம் அணைந்த காரணத்தால்தான் உலகம் அழியப்போகின்றது என்று பரப்பப்படும் பீதியை போக்கும் வகையிலும் விழிப்புணர்வு வரிகள் இடம்பெற்றிருந்தன.
வள்ளலார் ஏற்றிவைத்த தீபம் அணைந்த காரணத்தால் உலகம் அழியப்போகின்றது என்று சிலர் வந்தந்தி பரப்பி வருகின்றனர். அவர் ஏற்றி வைத்த தீபம் அணைவது இருக்கட்டும், அதை ஏற்றிவைத்த வள்ளலாரே இறந்துவிட்டாரே! இந்த செய்தியை மக்கள் சிந்திக்கமாட்டார்களா? என்று கேட்கப்பட்ட கேள்விதான் இந்து முன்னணி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இன்னபிற சங்பரிவார கும்பல்களின் மனதை புண்படுத்திவிட்டதாம்.
காரணம் நம்முடைய துண்டு பிரசுரத்தில் வள்ளலார் இறந்துவிட்டதாக குறிப்பிட்டிருக்கின்றோம். ஆனால் வள்ளலார் இறக்கவில்லை. இன்றுவரை அவர் உயிரோடு இருக்கின்றார். உயிரோடு உள்ளவரை இறந்துவிட்டார் என்று சொல்லி எங்களது மனதை புண்படுத்திவிட்டார்கள் முஸ்லிம்கள். எனவே அவர்களை கைது செய்ய வேண்டும் என்பதுதான் சங்பரிவாரக் கும்பலின் குற்றச்சாட்டு.

இந்த துண்டுபிரசுர விநியோகத்தைக் கண்டித்து அனைத்து சங்பரிவார அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கடந்த 20.12.12 வியாழக்கிழமை அன்று சாலை மறியல் செய்தனர். அதில் 25க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களது தூண்டுதலின் பேரில் காவி கயவர்களுக்கு ஆதாரவாகத்தான் இந்த நள்ளிரவு கைது படலத்தை காவல்துறை அரங்கேற்றியுள்ளது.

தீபம் அணைந்து விட்டதால் உலகம் அழியும் என்று சொன்னால் அழியப் போகும் உலகத்தில் இந்து அல்லாத மக்களும் உள்ளனர். அவர்கள் அழியப்போகிறார்கள் என்று சொல்வது எங்களை பாதிக்கிறது என்று நாம் புகார் கொடுத்தால் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?

http://www.tntj.net/121934.html 




No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y