அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மார்க்க சந்தேகங்களுக்கு இந்தியாவில் தொடர்புகொள்ள மாலை இந்திய நேரம் மாலை 04.00முதல் 10.00வரை : M.S.சுலைமான் 009198407433337,அப்பாஸ் அலி 00918122452616,அப்துல் நாசர் 00919865584000,அப்துல் கரீம் 00919150502450 பெண்களுக்கு : 00919940652566

Wednesday, May 09, 2012

கோவையைக் குலுக்கிய குடும்பவியல் மாநாடு!



கடந்த மே 6ஆம் தேதி கோவையில் நடைபெற்ற மாவட்ட மாநாடு கோவையை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மாநாட்டுத் திடல் மட்டுமல்ல; திடலைச் சுற்றியுள்ள பகுதிகளும் மக்கள் வெள்ளத்தால் மிதந்தன.

மாவட்டம் தழுவிய அளவில் நடைபெறக்கூடிய ஒரு மாநாட்டிற்கு இந்த அளவிற்கு மக்கள் வெள்ளம், அதுவும் பெண்கள் வெள்ளம் சாரை சாரையாக வந்து கலந்து கொண்டது காண்போரை வியக்க வைத்தது. அல்ஹம்துலில்லாஹ்….

காலை 10 மணிக்கு மாநாட்டின் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. மாநாட்டிற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் கோவை ரஹீம் தலைமை வகித்தார்.

கண்ணைக் கவர்ந்த அரங்கங்கள் :
மக்களின் அறிவுத்தாகத்தைப் போக்கும் வகையிலும், மாநாட்டிற்கு வந்த மக்களுக்கு மார்க்க அறிவை இன்னும் அதிகமாக வளர்த்துக் கொள்ள வழிவகை செய்யும் வகையிலும் ஏராளமான அரங்கங்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்தன.


கல்வி அரங்கம்
ஜனாஸா பயிற்சி அரங்கம் (ஆண் – பெண் தனித்தனியாக)
குழந்தை வளர்ப்பு விழிப்புணர்வு அரங்கம்
சிசுக்கொலை குறித்த விழிப்புணர்வு அரங்கம்
தர்கா & மூடநம்பிக்கைகள் ஒழிப்பு அரங்கம்
திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகளை விளக்கும் அறிவியல் அரங்கம்
ஷரீஅத் தீர்ப்பாய அரங்கம்
மழலையர் அரங்கம்
இஸ்லாத்தை ஏற்றவர்களின் விபரங்களை விளக்கும் சிறப்பு அரங்கம்
ஃபத்வா அரங்கம்
ஹஜ் பயிற்சி அரங்கம்
தொழுகைப் பயிற்சி அரங்கம்
கணிணி மூலம் இஸ்லாமிய தாவாவை விளக்கும் அரங்கம்
டி.என்.டி.ஜே வின் அரும்பணிகளை விளக்கும் அரங்கம்
புகை மற்றும் மது விழிப்புணர்வு அரங்கம்
இடஒதுக்கீடு விழிப்புணர்வு அரங்கம்
கோவை மாவட்ட டி.என்.டி.ஜே வின் அரும்பணிகளை விளக்க தனி அரங்கம்
மருத்துவ ஆலோசனை, இரத்தவகை கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு பெற மருத்துவ அரங்கம்

என்று விதவிதமான அரங்கங்களை அமைத்து பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்துவிட்டனர்.

கல்வி அரங்கம் :
இந்த அரங்கத்தில் எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்? போன்ற மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்குவதற்குண்டான வழிவகைகள்  மாணவரணியினரால் செவ்வனே சொல்லிக் காட்டப்பட்டன. மேலும், இந்தச் சமுதாயம் கல்வியிலும், பொருளாதாரத்திலும் இந்த அளவிற்கு பின்தங்கியிருக்கக் காரணம் என்ன? ஏன் இந்த அளவிற்கு பின் தங்கியுள்ளது? இந்த நிலை மாற என்ன செய்ய வேண்டும் என்ற வழிவகைகளும் சொல்லப்பட்டன.

ஜனாஸா பயிற்சி :
இந்த அரங்கங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஆண்களுக்கு இ.முஹம்மது, இ.ஃபாரூக், இஸ்மாயில், யஹ்யா ஆகியோரும், பெண்களுக்கு சகோதரி சுமையா மற்றும் அல் இர்ஷாத் ஆசிரியை ஒருவரும் நியமிக்கப்பட்டு ஜனாஸாவிற்கு கஃபனிடுதல், குளிப்பாட்டுதல் போன்ற செயல்முறை விளக்கங்கள் சிறப்பாகச் செய்துகாட்டப்பட்டன.

குழந்தை வளர்ப்பு அரங்கம்:
இந்த அரங்கத்தில் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய செய்திகள் பேனர் வடிவிலும், சிசுக்கொலை குறித்த விளக்கங்கள் ஒரு மருத்துவ குழுவினரைக் கொண்டும் சிறப்பான முறையில் விளக்கப்பட்டது.

தர்கா & மூடநம்பிக்கைகள் ஒழிப்பு அரங்கம் :
இந்த அரங்கத்தில் ஆன்மீகம் என்ற பெயரால் ஒவ்வொரு தர்காவில் நடக்கும் அட்டூழியங்களும், அக்கிரமங்களும் வீடியோ காட்சிகளாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டே இருந்தன.

மேலும், இஸ்லாத்தில் இல்லாத மூடநம்பிக்கைகளை மக்களிடத்திலிருந்து ஒழிக்கும் விதமாக தட்டு, தகடு, தாயத்து போன்ற இணைவைப்புக்கு எதிராகவும் இந்த அரங்கத்தில் ஜமால் உஸ்மானி அவர்கள் தலைமையில் பிரச்சாரம் செய்யப்பட்டு அங்கு வந்த எண்ணற்ற  சகோதரர்கள் கட்டியிருந்த தட்டு, தகடு, தாயத்து ஆகியவை அந்த அரங்கத்திலேயே அறுத்து எறியப்பட்டன. உண்மையிலேயே இந்த அரங்கம் மூடநம்பிக்கை ஒழிப்பு அரங்கமாகத் திகழ்ந்தது.

தர்காக்கள் தரைமட்டமாக்கப்பட வேண்டியவை என்பதை விளக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்களும், தர்காவில் நடக்கும் செயல்கள் அனைத்தும் பிற மத மக்கள் மத்தியிலிருந்து காப்பியடித்தவை தான் என்பதை ஒப்பீடு செய்யும் ஒப்பீடு பேனரும் வைக்கப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இடஒதுக்கீடு விழிப்புணர்வு அரங்கம்:
இந்த அரங்கத்தில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை தமிழகத்தில் பெறுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போரட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள்  எவை என்பதை விளக்கி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், இவ்வரங்கத்தில்  ஜாதி வாரிக் கணக்கெடுப்பின் போது முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டியதன் விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் டி.என்.டி.ஜே.வின் மாநிலச் செயலாளர் மாலிக் அவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்கள்.

திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகளை விளக்கும் அறிவியல் அரங்கம் :
இந்த அரங்கம் வந்திருந்த அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய வகையில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
கிறித்தவ விவாதத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவராக இருந்த பெங்களூர் கனி அவர்கள் இந்த அரங்கத்திற்கான ஏற்பாடுகளைச் செவ்வனே செய்திருந்தார்.
மாநாட்டிற்கு வந்திருந்த பிற மத சகோதர, சகோதரிகளை இந்த அரங்கம் வெகுவாகக் கவர்ந்தது.

1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அறிவியல் உண்மைகளை ஆதாரங்களுடன் விளக்க, வந்திருந்தவர்களுக்கு அது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

வேதனையை உணரும் தோல், பால் உற்பத்தி, தேனீக்களின் அதிசயம், விண்வெளிப்பயணத்தின் போது இதயம் சுருங்கும் என்ற அறிவியல் உண்மை, குழந்தை ஆணாகவும், பெண்ணாகவும் பிறக்க ஆண் தான் காரணம் என்ற அறிவியல் உண்மை என்று திருக்குர்ஆன் கூறும் அடுக்கடுக்கான அறிவியல் உண்மைகளை ஆதாரங்களுடன் கனி அவர்கள் தலைமையிலான பயிற்சி பெற்ற மாணவர் அணியினர் விளக்க வந்திருந்த மக்கள் அதில் பல சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்றுச் சென்றனர்.

ஒரு கட்டத்தில், அரங்கத்திற்கு பார்வையாளர்களாக வந்த சூடான் மாணவர்கள் தங்களுக்கு ஆங்கிலம் மட்டும் தான் தெரியும் என்று சொல்ல விளக்கங்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டது சிறப்பான அழைப்புப்பணியாக அமைந்தது.

பிற மதத்தைச் சார்ந்த காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் ஆர்வமாக இந்த அரங்கத்திற்கு வந்து திருக்குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகளைக் கண்டு வியந்தது இந்த அரங்கத்தில் நடந்த அழைப்புப்பணியில் ஹைலைட்.

நிரம்பி வழிந்த பெண்கள் கூட்டம் :
நேரம் செல்லச் செல்ல பெண்கள் சாரை சாரையாக வந்து குவியத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் மாநாட்டின் அரங்கத்திற்குள் நுழைவதற்கு பல மணி நேரம் காத்திருந்து வரிசையில் நின்று அரங்கங்களைப் பார்வையிடக்கூடிய அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கம் போல இந்த மாநாட்டிலும் பெண்கள் கூட்டம் அலை மோதியது. ஆண்களை விஞ்சக்கூடிய அளவிற்கு பெண்கள் கூட்டம் என்பது தான் தவ்ஹீத் ஜமாஅத்திற்கென்ற தனிமுத்திரை என்பது இந்த மாநாட்டிலும் பளிச்சிட்டது.

வியந்து போன உளவுத்துறை :
எந்த ஆடல் பாடல்களோ, கூத்து கும்மாளமோ, கேளிக்கைகளோ இல்லாமல், பெரிய பிரபலங்கள் என்று யாரும் வராமல் சர்வ சாதாரணமாக தவ்ஹீத் ஜமாஅத் கூட்டும் இத்தகைய மாநாடுகளில் இப்படி காட்டாற்று வெள்ளம் போல மக்கள் எப்படித்தான் வந்து குவிகின்றார்களோ என்றும், அதுவும் வீட்டை விட்டே வெளியில் வராத இஸ்லாமியப் பெண்கள் எப்படி தங்களது கைக்குழந்தைகளுடன் காலை 10மணி முதல் இரவு 10.30 மணி வரை இருந்து சொற்பொழிவுகளைக் கேட்கிறார்களோ என்றும், இதன் ரகசியத்தை இப்போதும் எங்களால் அறிய முடியவில்லை என்றும் உளவுத்துறை அதிகாரி ஒருவர் கருத்து சொன்னது இந்த ஜமாஅத்தின் கண்ணியத்தையும், அதே நேரத்தில் தூய இறையோனின் வல்லமையையும் பறைசாற்றுவதாக இருந்தது.

வாழ்விற்கு வழிகாட்டும் ஷரீஅத் தீர்ப்பாய அரங்கம் :
குடும்பங்களில் நடக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணம் கணவன், மனைவிக்கு மத்தியில் இருக்கும் சரியான புரிந்துணர்வு இல்லாததுதான்.

இதை ஷரீஅத் கவுன்சிலிங் மூலம் எளிதாகத் தீர்த்து வைக்கும் பணியை தவ்ஹீத் ஜமாஅத் சிறப்பாக செய்து வருகின்றது.

அதன் பொறுப்பாளராக இருக்கும் மாநிலச் செயலாளர் யூசுப் அவர்கள் தலைமையில் ஷரீஅத் தீர்ப்பாய அரங்கம் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பல சகோதரர்கள் தங்களது குடும்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு இஸ்லாமிய அடிப்படையில் தீர்வு காண்பது எப்படி என்ற வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் பெற்றுச் சென்றனர். தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த ஷரீஅத் தீர்ப்பாயத்தின் மூலம் பயன்பெற்ற ஒரு பெரியவர், நமது ஷரீஅத் அரங்கிற்கு வந்து, “இது போன்ற தங்களது பணி சிறப்பாகத் தொடர வேண்டும்” என்று சொல்லிவிட்டு, தனது குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாஅத்தை தான் அணுகிய போது, அது குறித்து நீதிமன்றம் சென்ற போது கூட முடிவிற்கு வராத அந்தப் பிரச்சனை, தவ்ஹீத் ஜமாஅத்திற்கு நான் எனது பிரச்சனையை கொண்டு வந்த உடனேயே துரிதமாகவும், சுமூகமாகவும் அந்தப் பிரச்சனை முடிந்தது. உங்களது இந்தப் பணி சிறந்த பணி; இது இன்னும் சிறப்பாக தொடர வேண்டும்” என்று சொன்னது மிகப்பெரிய ஊக்க டானிக்காக அமைந்தது.

சுடச் சுட ஃபத்வா :
மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்ட முக்கிய அரங்கங்களில் குறிப்பிடத்தக்க மற்றொரு அரங்கம் ஃபத்வா அரங்கம்.
மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் அப்பாஸ் அலி, அப்துந்நாசர் ஆகியோர் தலைமையில் ஒலி, சலீம், அடங்கிய குழுவினர் மாநாட்டிற்கு வந்த பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கான ஆதாரங்களையும், பதில்களையும் சுடச் சுட உடனுக்குடன் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்து அசத்தினர்.

தொழுகை பயிற்சி அரங்கத்தை ஆதரவற்ற சிறுவர்கள் இல்ல பொறுப்பாளராக உள்ள ராஜ் முஹம்மது அவர்கள் சிறப்பாக நடத்தினார்.

நேரடி ஒளிபரப்பு :
மாநாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் ஆன்லைன்பீஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கலைகட்டிய மழலையர் அரங்கம் :
சிறுவர் சிறுமியர்களுக்கான தனி அரங்கம் அப்பாஸ் அலி அவர்களது உரையுடன், மாவட்ட நிர்வாகி சஹாப்தீன் தலைமையேற்க சிறப்பான முறையில் துவங்கியது.

சுகுணாபுரம் கிளையைச் சேர்ந்த மதரஸா மாணவர்கள் பேய், பிசாசு பற்றிய மூடநம்பிக்கைகளை விளக்கும் வகையில் நாடகங்களை நடித்துக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பொதுவாக பேய், பிசாசுகளைப் பற்றி சிறுவர்கள் தான் அதிகம் பயப்படுவார்கள். ஆனால், இங்கோ நிலைமை தலைகீழ். சிறுவர்கள் பயந்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. அந்த சிறுவர்களே பேய், பிசாசு குறித்த மூடநம்பிக்கைகளை மக்கள் மத்தியில் விளக்குகின்றார்கள் என்றால் இதுவே ஏகத்துவ எழுச்சியின் வளர்ச்சியைக் காட்டுகின்றது.

குறிச்சிப்பிரிவு கிளை மதரஸா மாணவர்கள் வரதட்சணை குறித்த விழிப்புணர்வு நாடகத்தை நடத்தியது சிறப்பாக இருந்தது.

அர்ரிழா பெண்கள் கல்லூரியின் மாணவியர் ஹதீஸ்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் “ஓரங்க நாடகம்” ஒன்றைச் சிறப்பான முறையில் செய்து காட்டினர். அவர்கள் தங்களது ஓரங்க நாடகத்தில், தவ்ஹீத் ஜமாஅத் குர்ஆனுக்கு முரண்படக்கூடிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பது ஏன்? என்பன உள்ளிட்ட தகவல்களை நாடக வடிவில் நடத்திக்காட்டியது பார்ப்பவர்களின் உள்ளத்தில் பளிச்சென்று பதியக்கூடிய வகையில் அமைந்திருந்தது.

போட்டிகளும், பரிசுகளும் :
மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குப் பேச்சுப்போட்டி, துஆ மனனம், திருக்குர்ஆன் மனனம், கிராஅத் போட்டிகள் என்று பலவிதமான போட்டிகள் வைக்கப்பட்டன.
இந்த போட்டிகளுக்கு நடுவர்களாக தாஹா மற்றும் தாவூத் கைசர் ஆகியோர் இருந்தனர். போட்டிகளை மேட்டுப்பாளையம் சல்மான் அவர்கள் சிறப்பாக நடத்தினார். இறுதியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளங்களை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தக்கூடிய வகையிலும், ஆன்லைன்பீஜே இணையதளத்தில் ஹதீஸ்களை தேடி எடுப்பது எவ்வாறு போன்றவற்றை விளக்கவும், கணிணி பற்றிய விழிப்புணர்வு அரங்கம் அன்சர்கான் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

டி.என்.டி.ஜே.வின் அரும்பணிகளை விளக்க தனி அரங்கம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

சுவனக் குடும்பத்தை கட்டமைக்க வழிகாட்டிய எழுச்சி உரைகள் :

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்!
அல்குர்-ஆன் 66 : 6
மேற்கண்ட குர்ஆன் வசனத்தை மையமாக வைத்துத்தான் கோவை மாவட்ட நிர்வாகத்தினர் இந்தக் குடும்பவியல் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த அடிப்படையில் குடும்பத்துடன் நாம் அனைவரும் சுவனம் செல்லவும், நாம் நமது குடும்பத்தினரை நரக நெருப்பை விட்டும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும் பேச்சாளர்களுக்கு தலைப்பை தேர்வு செய்து வழங்கியிருந்தனர்.

மாநாட்டுக்கு தலைமை தாங்கிய மாநிலச் செயலாளர்  கோவை ரஹீம் அவர்களின் தலைமை உரையுடன் மாநாட்டு உரைகள் மாலை 4மணிக்கு துவங்கியது.

மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.எஸ்.சுலைமான் அவர்கள் “ஆதரிக்கும் பிள்ளைகள்” என்ற தலைப்பில், அல்லாஹ்விற்கு அடுத்து மனிதர்களில் நன்றி செலுத்த கடமைப்பட்டவர்களான நமது பெற்றோர்கள் மீது பிள்ளைகள் எப்படியெல்லாம் அன்பைப் பொழிய வேண்டும் என்பதை திருமறை வசனங்களை மேற்கோள்காட்டி பேசினார்.

அடுத்ததாக, மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள், “அரவணைக்கும் பெற்றோர்கள்” என்ற தலைப்பில், குழந்தைகளை இணைவைப்பின் சாயல் கூட படிந்துவிடாமல் கண்ணும் கருத்துமாக, லுக்மான் (அலை) அவர்கள் எப்படி தனது மகனுக்கு போதனைகளை கூறி வளர்த்தார்களோ அப்படி கண்காணித்து வளர்க்க வேண்டுமென்றும், பெற்றோர்களுக்கு அவர்களது கடமையை நினைவூட்டினார்.

மாநில தணிக்கைக் குழு தலைவர் எம்.ஐ.சுலைமான் அவர்கள், “அன்பு மனைவி” என்ற தலைப்பில் மனைவியானவள் கணவனுக்கு எந்தெந்த வகையில் இன்பந்தரக்கூடியவளாக இருக்க வேண்டும் என்பதையும், எப்படியெல்லாம் தொல்லை தரக்கூடியவளாக இருக்கக்கூடாது என்பதையும் நடைமுறை உதாரணங்களோடு நகைச்சுவை பொங்க எடுத்துக் கூறினார்.

அடுத்ததாக, மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள், “அருமை கணவன்” என்ற தலைப்பில், ஒரு அன்புக் கணவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதையும், எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதையும் விளக்கியதோடு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படியெல்லம் தங்களது மனைவிமார்களிடத்தில் நடந்து கொண்டார்கள் என்பதை சுவாரசியமான உதாரணங்களோடு விவரித்தார்.

அடுத்ததாக, மாநில மேலாண்மைக் குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள், “அருள்மிகு திருமணம்” என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

வரதட்சணை கொடுமையால் பெண் குழந்தைகளை பிஞ்சிலே கொலை செய்யும் மனித மிருகங்களின் வெறிச்செயல்களைப் பற்றி அவர் விவரித்தார். இந்த வரதட்சணையில் பங்கெடுக்கக்கூடிய ஒவ்வொருவனுக்கும் இந்த பாவத்திற்கான தண்டனையில் ஒரு பங்குண்டு என்று எச்சரித்தார்.
மண்டபங்களில் நடத்தும் திருமணங்களில் பரக்கத்தை எதிர்பார்க்க இயலாது என்பதால் தஃப்தர் மட்டும் தருகிறோம்; தாயீ தருவதில்லை என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாட்டையும் அவர் விளக்கினார்.

தவ்ஹீத் சகோதரன் ஒவ்வொருவரும் தவ்ஹீதையே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வரும் தவ்ஹீத் மணமகள்களைத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்பதை உணர்ச்சி பொங்க எடுத்துக்கூறினார்.

இறுதியாக சகோதரர் பீ.ஜே அவர்கள் “குர்ஆன் ஒளியே குடும்ப வழி” என்ற தலைப்பில் உரை நிக்ழ்த்தினார். இந்தக் குடும்பவியல் மாநாட்டில் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த மக்கள் தான் அதிகமான அளவில் வந்து கலந்து கொண்டுள்ளனர் என்பதால் அவர்களை கவனத்தில் கொண்டு பீ.ஜே அவர்கள் ஆற்றிய உரை அமைந்திருந்தது.

குடும்பத்தில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் “இறையச்சம்” என்ற ஒன்று இல்லாதது தான். அது இருந்தால் தான் முன்னால் பேசிய தலைப்பிலான அறிவுரைகள் எல்லாம் நமக்குப் பயன் தரும். இவ்வுலக்த்தில் உள்ள அனைத்தையும் விட படைத்த இறைவனுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி ஒருவன் அஞ்சினால் தான் அவனுடைய உள்ளத்தில் இறையச்சம் குடிகொள்ளும். தர்காவிற்கு சென்று அவ்லியாக்கள் மூலம் அல்லாஹ்வை சரிக்கட்டிவிடலாம் என்ற ரீதியில், தர்கா உண்டியலில் பணம் போட்டுவிட்டு அந்த அவ்லியாவை சரிக்கட்டுவதன் மூலம் அல்லாஹ்வை சரிகட்டி விடலாம் என்ற அடிப்படையில் அல்லாஹ்வை நம்புவதால் தான் அவனுக்கு சரியான இறையச்சம் அவனது உள்ளத்திலோ, அவளது உள்ளத்திலோ வருவதில்லை.

இப்படி அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய விதத்தில் அஞ்சாததுதான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்ற ரீதியில் சகோதரர் பீ.ஜே அவர்கள் ஆற்றிய உரை ஒரு கணம் வந்திருந்த சுன்னத் ஜமாஅத் மக்களை நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

மாநாட்டு மேடையில் தண்டபானி என்ற சகோதரர் இஸ்லாத்தைத் தழுவி தன்னுடைய பெயரை அப்துர்ரஹ்மான் என்று மாற்றிக் கொண்டார். அவருக்கு மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலிமாவைச் சொல்லிக் கொடுத்தார். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்து. அவரது மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

இறுதியாக மாநாட்டு தீர்மானங்களை கோவை மாவட்டச் செயலாளர் நவ்ஷாத் அவர்கள் வாசித்தார்.

கடந்த 26.04.12 ஆம் தேதி கோவை மாவட்டச் செயலாளர் நவ்ஷாத் அவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்த கோவை காவல்துறையை கண்டித்து கண்டனத் தீர்மானத்தை மாநிலச் செயலாளர் யூசுப் அவர்கள் வாசித்தார்.

இறுதியாக மாவட்டத் தலைவர் ஜலால் அவர்கள் நன்றியுரை கூற “குடும்பவியல் மாநாடு” இனிதே நிறைவடைந்தது.

தவ்ஹீத் என்ற போர்வையில் உள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் மாநில மாநாடுகளில் கூட்டாத மக்கள் கூட்டத்தை ஒரு மாவட்ட மாநாட்டில் கூட்டிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

No comments:

Post a Comment

தமிழ் நேரடியாக தட்டச்சு செய்ய, காப்பி எடுக்க Ctrl+C,வேறு இடத்தில் பதிக்க Ctrl+Y